Published : 09 Jun 2021 07:55 PM
Last Updated : 09 Jun 2021 07:55 PM

நிறைவடையும் தடைக்காலம்; ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சீரமைப்புப் பணியில் தீவிரம்

ராமேசுவரத்தில் வலைகளை சரி செய்யும் மீனவர்கள்.

ராமேசுவரம்

மீன்பிடி தடைக்காலம் ஜுன் 14 அன்றுடன் முடிவடைவதால் ராமேசுவரம் கடலோரப் பகுதியில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் துவங்கியது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்திலிருந்து எஸ்.பி பட்டிணம் வரையிலும் பாக் ஜலசந்தி கடலிலும், தனுஷ்கோடியிலிருந்து கன்னிராஜபுரம் வரையிலும் மன்னார்

வளைகுடா கடலிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப் படகுகளில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு, படகுகள் கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தில் படகுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ளும் மீனவர்கள்.

இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளில் பராமரிப்பு பணி மற்றும் வலை பின்னுதல் பணியையும் மேற்கொள்ளுவர். கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விசைப்படகுகளில் எந்தவித பராமரிப்புப் பணிகளையும் மீனவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.

இவ்வாண்டு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய போது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்ததால், மே முதல் வாரத்தில் படகுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மீனவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், அடுத்தடுத்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால் அவர்களால் எந்தவித பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் ராமேசுவரம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகளில் இன்ஜின் பழுது நீக்குதல் தச்சுப் பணிகள் மற்றும் மராமத்து உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x