Published : 09 Jun 2021 06:07 PM
Last Updated : 09 Jun 2021 06:07 PM

தூத்துக்குடியில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியர் தகவல்

கோவில்பட்டி அருகே இடைசெவலில் மறைந்த எழுத்தாளர் கி.ரா.படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி 

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மறைவை தொடர்ந்து, கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்கப்படும். ஒரு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதனடிப்படையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கடந்த வாரம் கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தோம்.

இடைசெவல் கிராமத்தில் எழுத்தாளர் கி.ரா. படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்க ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 துறைகளும் இணைந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் வீடு வீடாக சென்று, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கரோனா பரிசோதனை கொடுத்தவர்கள், காய்ச்சல் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்பவர்கள், தனியார் மருந்தகங்களில் பராசிட்டமால் மாத்திரைகள் வாங்குபவர்கள் ஆகியோர் கண்காணிக்கப்படுவார்கள்.

இதே போல், ஊராட்சி மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் 3-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெருவில் உள்ள அனைவரையும் தினமும் ஆக்சிஜன் அளவு, வெப்ப மானி மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்பது கண்டறியப்படும். அதையும் தற்போது ஆய்வு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளைக்கு 6 ஆயிரம் தடுப்பூசிகள் வருவதாக கூறுகின்றனர். ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 36 குழுக்கள் மூலம் 2 முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 8 சதவீதமாக இருந்தது. தற்போது அது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதார பணியாளர்கள் 90 சதவீதத்துக்கு மேலும், முன் களப்பணியாளர்கள் 85 சதவீதமும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் முகாம்கள் நடத்தப்படும். தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு காணொளியும் எடுத்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்காக போதிய அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிடுவதற்கு மாவட்ட வருவாய் அதிகாரியை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம், என்றார் அவர்.

முன்னதாக கயத்தாறு வட்டம் ஆசூர் ஊராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x