Last Updated : 09 Jun, 2021 03:11 PM

 

Published : 09 Jun 2021 03:11 PM
Last Updated : 09 Jun 2021 03:11 PM

சசிகலா குறித்து விமர்சனம்: சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் என புகார்

ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் மனு அளித்தார்.

விழுப்புரம்

சசிகலா குறித்து விமர்சித்ததால், தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இன்று (ஜூன் 09) திண்டிவனத்தில் உள்ள ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

"கடந்த 7-ம் தேதி சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகின்றனர்.

மேலும், கைப்பேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் செய்துள்ளனர். இன்னும் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

மேலும், சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என, மிரட்டும் தொனியில் பேசிவருகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும்.

எனவே, கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாகவும் பேசக் காரணமாக இருந்த சசிகலா மீதும், என் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அப்புகாரில் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அப்போது, வானூர் எம்எல்ஏ சக்கரபாணி உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x