Published : 09 Jun 2021 01:46 PM
Last Updated : 09 Jun 2021 01:46 PM

சென்னையில் ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த திட்டம்: ஜெயக்குமார் தகவல்

ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

சென்னையில் வரும் 14-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் இன்று (ஜூன் 09) மனு அளித்தார்.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், வரும் 14-ம் தேதி, 12 மணியளவில் தலைமை அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, இக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும். எனவே, இக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரக் காவல் ஆணையரிடமும் மனு அளிக்கப்படும். கரோனா காலத்தில் முழுமையாக விதிகளைப் பின்பற்றி கூட்டம் நடத்தப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜெயக்குமார் பதிலளித்தார்.

நெல்லையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே பிரச்சினை இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதே?

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுக செயல்படுகிறது. எந்தப் பிரச்சினையும் கட்சியில் இல்லை. திமுக போன்ற எதிரிகள் நம்மைக் குறித்துப் பேசுவதற்கு நாம் இடம் தரக்கூடாது என்பதே அதிமுகவினரின் எண்ணமாக இருக்க வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அதிமுகவினரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவதுபோல் ஆடியோ வெளியாகியுள்ளதே?

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் பேசியவர் அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை. இதனை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார். எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக எழுச்சியுடன் செயல்படுகிறது. இதே நிலைதான் தொடரும்.

அதிமுகவுக்குப் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெறுமா?

100% இல்லை. நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழிநடத்துவர். நாங்கள்தான் அதிமுக என உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இரட்டை இலை எங்களிடம்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றமே சான்றிதழ் கொடுத்துவிட்டது.

இரட்டைத் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?

தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொண்டதால்தான் எங்களுக்கும் திமுகவுக்கும் 3%தான் வாக்கு வித்தியாசம் வந்தது. அப்படியென்றால், எல்லோரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

தமிழகத்திற்குத் தடுப்பூசியை அதிகரிக்கக் கோரி பிரதமரை அதிமுக வலியுறுத்துமா?

எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறார். தமிழகத்தின் பல இடங்களில் தடுப்பூசி இல்லை. சில இடங்களில் இரண்டு லட்சம் தடுப்பூசி போடுவதாகக் கூறுகின்றனர். ஆனால், எங்கு போட்டிருக்கின்றனர்?

39 எம்.பி.க்கள் எதற்கு வைத்திருக்கின்றனர்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காரியம் சாதிக்காமல் வெறுமனே கடிதம் எழுதுகின்றனர். கரோனா குறைந்துவிட்டது என்கின்றனர். ஆனால், பரிசோதனை செய்தால்தானே கரோனா தொற்று இருப்பது தெரியும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x