Published : 09 Jun 2021 12:05 PM
Last Updated : 09 Jun 2021 12:05 PM

அரசு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள 5,25,000 ஏக்கர் கோயில் நிலம்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழக கோயில்களுக்குச் சொந்தமாக இருந்ததாக 1985- 87ஆம் ஆண்டில் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசு, 1985-86, 1986-87ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

அதேபோல, கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தைக் கோயில்களுக்காகப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, 1985-87ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள நிலங்களின் விவரங்களையும், 2018-2020ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட நிலங்களின் விவரங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கோவை கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை எனக் கடிதம் அனுப்பிய சூலூர் சார் பதிவாளர், அது சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x