Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 1,485 மருத்துவர்களுக்கு பணி: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 70 மருத்துவர்களுக்கான தற்காலிக பணி நியமன ஆணைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். உடன் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி., உதயநிதி எம்எல்ஏ., சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை

தமிழகத்தில் 1,485 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில்சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் உடல்நிலையை உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக டிஜிட்டல் தகவல் மற்றும் உதவி மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அடையாறு ஆனந்தபவன் சார்பில்வழங்கப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 80 படுக்கைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, 70 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் 2 ஆயிரம்மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 1,485மருத்துவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் எங்கேயும் மருத்துவ காலிப்பணியிடங்கள் இல்லை. தமிழக அரசு நிர்ணயித்தகட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்த 40-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகள் 3,060 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது. இதுவரை, தமிழகத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 35 ஆயிரம் ஆம்போடெரிசின்-பி மருந்துகளின் தேவை உள்ளது. இதுகுறித்து, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தயாநிதிமாறன் எம்பி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x