Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

புதுச்சேரியில் வர்த்தகர்கள் கடும் தவிப்பு; ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் காலதாமதம்: பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள் இன்று திறப்பு

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பானது காலதாமதமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் அறிவிக்கப்பட்டதால் பெரும் பாலான கடைகள், ஹோட்டல்கள் இன்று திறக்கப்பட வுள்ளன. அதேநேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலில் புதுச்சேரி நெடுநாளைக்கு பிறகு திணறியது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் புதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலதாமதமாக அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் ஊரடங்கு நிறைவுக்கு 3 நாட்களுக்கு முன்பே புதிய தளர்வுகள் குறித்து அரசு அறிவித்தது. ஆனால் புதுவையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள் வெளியாவதில் கடைசி வரை தாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக நேற்றுமுன்தினம் காலை முதல் வியாபாரிகள், ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணிக்கே அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பின் படி, அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்கலாம். மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாமல் திறக்கலாம். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். பேருந்து, ஆட்டோ, டாக்சி இயங்கலாம். திருவிழா, கூட்டம் நடத்த அனுமதியில்லை. புதிய வாகன பதிவு, டிரைவிங் லைசென்ஸ், பத்திரப்பதிவு செய்யலாம். அரசு துறைகளில் சட்டசபை,தலைமை செயலகம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, பொதுப்பணி, குடிமைப்பொருள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை தவிர்த்து மற்ற துறைகள் இயங்கஅனுமதியில்லை என்பது உட்படபல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

" காலதாமதமான அறிவிப்பால் வியாபாரிகள் கடைகளை திறக்க தயாராகவில்லை. தகவல் முன்கூட்டியே தெரிந்தால்தான் உணவகங்கள் முன்கூட்டியே தயாரிப்பு வேலையில் இறங்கமுடியும். இதனால் பெரும்பாலான உணவகங்கள் நேற்று திறக்கப்படாமல் மூடப்பட்டு கிடந்தது. வணிக நிறுவனங்கள், கடைகள் ஒரு மாதத்துக்கும் மேல் பூட்டி கிடப்பதால் தூசி படிந்துள்ளது. ஊழியர்களை பணிக்கு வரவும்தகவல் சொல்லவும் முடியவில்லை.இதனால் நேற்று காலை நிறுவனங்களை திறந்து சுத்தப்படுத்தும் பணியில் பலரும் ஈடுபட்டோம். அதனால் புதன்கிழமையன்று திறக்க பலரும் முடிவு எடுத்துள்ளோம்" என்று சில இடங்களில் வியாபாரிகள் தெரிவித்தனர்.

காலதாமதமான அறிவிப்பால் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயங்கவில்லை. ஒரு சில நகர பேருந்துகள் மட்டும் காலை 11 மணிக்கு மேல் இயங்கியது. இதுதொடர்பாக பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணனிடம் கேட்டபோது, “நள்ளிரவுதான் அறிவிப்பு வெளியானது. நீண்டநாட்களாக பேருந்துகளை நிறுத்தி வைத்ததால் உடனடியாக இயக்க முடியாத நிலை உள்ளது. அதோ தமிழக பகுதிக்கு பேருந்துகள் செல்ல முடியாது, மாலை 5 மணிக்கு மேல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் நஷ்டத்தோடு இயக்க வேண்டியிருக்கும். ஓரிரு நாட்களில் பேருந்துகளை சீரமைத்து இயக்குவோம்" என்றார்.

அதேநேரத்தில் தளர்வுகளால் நகரெங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டது. வீட்டில் முடங்கி கிடந்த பலரும் ஊரடங்கு தளர்வால் நேற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். நகரின் முக்கியப் பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பின் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x