Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

பாக்கமுடையான்பட்டில் கரோனா தடுப்பூசி முகாம்: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான் பட்டில் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி சுகாதாரத் துறையினரால் போடப்பட்டு வருகிறது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இணையவழி மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் லாஸ்பேட்டை சுகாதார நலவழி மையம் சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பாக்கமுடையான்பட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவ அதிகாரி சாந்தி கலந்து கொண்டு தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், கரோனா நோடல் அதிகாரி ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் ஷாகுல் ஹமீது, அரசு பள்ளி ஆசிரியர் ரேவதி மற்றும் சுகாதார நலவழி மைய செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x