Published : 28 Mar 2014 10:10 AM
Last Updated : 28 Mar 2014 10:10 AM

ப.சிதம்பரத்தை தரக்குறைவாக பேசியதாக அதிமுக வேட்பாளர் மீது போலீஸில் புகார்

தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை தரக்குறைவாக பேசியதாக அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர், பெரியகோட்டை, சிறுகுடி , ஆலம்பச்சேரி, மேலநெட்டூர் கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். மாலையில் ஆலம்பச்சேரியில் பிரச்சாரம் செய்தபோது ப.சிதம்பரத்தை மிகவும் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அப்போது மானாமதுரை எம்எல்ஏ குணசேகரன், மானாமதுரை ஒன்றியக் குழுத் தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் உடன் இருந்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த சர்ச்சை குறித்து ஆலம்பச்சேரி கிராம காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முத்துச்சாமி, மானாமதுரை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் தெரிவித்துள்ளார். அதில் தேர்தல் விதிமுறைகளை மீறி அமைச்சரை தரக்குறைவாக பேசியதாக அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மானாமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதனிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் பேசவில்லை. தவறான தகவல்களைக் கூறி புகார் செய்கின்றனர். அதில் உண்மை இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x