Last Updated : 08 Jun, 2021 07:17 PM

 

Published : 08 Jun 2021 07:17 PM
Last Updated : 08 Jun 2021 07:17 PM

கீழமை நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: விதிமுறைகளை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

மதுரை

மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் எந்த விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்? என்பதை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த் வழக்கறிஞர் ஏ.கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு விரைவில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு வழக்கறிஞர்களாக தகுதியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். தகுதியில்லாதவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும்.

2017-ம் ஆண்டின் விதிகளின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இதனால், 2017-ம் ஆண்டின் அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிகள் அடிப்படையில் சட்ட வல்லுனர் குழு அமைத்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும், அரசு வழக்கறிஞர்கள் விபரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும். 1961-ம் ஆண்டின் அரசாணையை பின்பற்றி அரசு வழக்கறிஞர் நியமனம் நடைபெறும் என்றார்.

பின்னர் நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x