Last Updated : 08 Jun, 2021 06:12 PM

 

Published : 08 Jun 2021 06:12 PM
Last Updated : 08 Jun 2021 06:12 PM

மகளிர் சுய உதவிக் குழு கடனைத் திரும்பச் செலுத்த நிர்பந்தம்: தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்குக் கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கோப்புப் படம்.

கோவை

ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் வங்கிகள், நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தொகையைத் திரும்பச் செலுத்தக் கேட்டு நிர்பந்தம் செய்து வருவதாக புகார்கள் வருகின்றன.

மகளிர் சுய உதவிக் குழுவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களது கடனுக்கான தவணைத் தொகையை வசூலிக்க நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்து அவர்களுக்குக் கால அவகாசம் வழங்குவதோடு, கூடுதல் வட்டி வசூலிப்பதைத் தவிர்க்க வேண்டும். கடன் தொகையை வசூல் செய்வதற்காக நிதி நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதால் அவர்கள் மூலம் கரோனா தொற்றுப் பரவவும் வாய்ப்புள்ளது.

எனவே, இது தொடர்பாக எந்த புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் வந்தால், ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாகக் கருதப்பட்டு, தொடர்புடைய தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x