Published : 08 Jun 2021 02:35 PM
Last Updated : 08 Jun 2021 02:35 PM

கரோனாவால் இறந்த அனைவரது குடும்பத்துக்கும் இழப்பீடு: அரசுக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை

கரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும், அனைவருக்கும் கொடுக்க வேண்டுமென உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அவை நீதிமன்றத் தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புகிறோம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளைத் தொடர்ந்தார். அதில் கரோனாவால் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நலன் காக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.

கோவை சுற்றுப்புறப் பகுதிகளில் கரோனா பரவல் குறையாததால் அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டுமென மற்றொரு வழக்கையும் தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பொதுநல வழக்குகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காகத் தாக்கல் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டனர்.

நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவை நீதிமன்றத் தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாகச் சுட்டிக்காட்டினர்.

கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி, பூமிராஜ் தொடர்ந்த இரு வழக்குகளையும் நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x