கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீதும், தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நோயாளிகள் இறக்க நேரிடும்போது தாக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களைக் காக்க, தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம்முயிரைத் துச்சமென மதித்து அரும் பணியாற்றி வருகின்றனர்.

அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றி வரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள் நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையும் முதல்வர் உத்தரவுப்படி அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் சில நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும் சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிறது.

இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கூறியவாறு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்துவரும் நிலையில், ஒருசில மருத்துவமனைகளில் பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்கக்கூடிய அதே நேரத்தில் பொதுமக்களிடம் அதிகக் கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது.

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (Tamil nadu clinical Establishment act) நடவடிக்கை எடுத்து இந்த மருத்துவமனைகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in