Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை

சென்னை

பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை.

சென்னை கே.கே நகர் பத்மா சேஷாத்திரி மேல்நிலைப்பள்ளியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வருகின்றனர். முன்னதாக, பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவி வழங்கிய புகார் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. அதன்படி, பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகள் ஆணையத்தில் ஜூன் 4-ம் தேதி ஆஜராகினர். அவர்களிடம் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் ராம் ராஜ், துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்படி, விசாரணை மூலம் பெறப்பட்ட தகவல்களை அறிக்கையாகத் தயாரித்து நிர்வாகிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.தர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (நேற்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல, மாணவிகள் மீதான பாலியல் புகார் குறித்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி இன்றும் (8-ம் தேதி), அடையாறு கேந்திரிய வித்யாலயா பள்ளி நாளையும் (9-ம் தேதி), மகரிஷி பள்ளி வரும் 10-ம் தேதியும் ஆணையம் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்கச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x