Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM

திருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் முன்பாக விவசாயி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் சலசலப்பு

விவசாய நிலத்தை அபகரித்துக் கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் முன்பாக விவசாயி தனது குடும்பத்தினருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் திரியாலம் அடுத்த டிவி துரைசாமி நகரைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி (79). இவர், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு தனது மகன் எத்திராஜ் (40), மருமகள் கவிதா (35) ஆகியோருடன் வந்தார்.

எஸ்பி அலுவலகத்துக்கு முன்பாக சின்னசாமியின் மருமகள் கவிதா, தனது கணவர் எத்திராஜ் மற்றும் உறவினருடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்கள் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.

அதன்பிறகு, காவல் துறையினர் நடத்திய விசாரணை யில், சின்னசாமிக்கு திரியாலம் பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தை அதேபகுதியைச் சேர்ந்த ஜெயபால் (55), அவரது மனைவி சந்திரா (50) ஆகியோர் அபகரித்துக்கொள்ள முயல்வதாகவும், இதை தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத் தில் பலமுறை புகார் அளித்தும் ஜெயபாலிடம் விசாரணை நடத்த வில்லை என்பதால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக சின்னசாமி மருமகள் கவிதா கூறினார்.

இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். எஸ்பி அலுவலகம் முன்பாக விவசாயி தனது குடும்பத் தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x