Last Updated : 07 Jun, 2021 06:07 PM

 

Published : 07 Jun 2021 06:07 PM
Last Updated : 07 Jun 2021 06:07 PM

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்ததற்கு எதிரான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களாக நியமித்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளைக்கு 17 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு மே 13-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நியமனம் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக 2017-ல் உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவைப் பின்பற்றாமல் நடைபெற்றுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் 2019-ல் அப்போதைய அரசு, வழக்கறிஞர் நியமனம் தொடர்பாகப் புதிய அரசாணையைப் பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து, புதிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

எனவே, 2019 அரசாணையின் அடிப்படையில் நடைபெற்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும், 2017-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாமல் 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 2017-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி அரசு வழக்கறிஞர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்துத் தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், ''அரசு வழக்கறிஞர்கள் நியமனம் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி முறைப்படியே நடைபெறும்'' என்றார்.

இதையடுத்து, ''உயர் நீதிமன்றத்தில் அரசுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். அரசு வழக்கறிஞர்களும் சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்றிருக்காமல் வழக்குகளில் அரசுக்கு வெற்றியைத் தேடித் தரும் வகையில் திறமையாக வாதிடுபவர்களாக இருக்க வேண்டும்'' என்ற நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x