Published : 07 Jun 2021 05:43 PM
Last Updated : 07 Jun 2021 05:43 PM

முதல்வர் ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து அசந்துவிடுகிறேன்: அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி

கோப்புப் படம்

வேலூர்

கரோனா பரவல் தடுப்புப் பணியாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றாலும் சரி, முதல்வர் ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து அசந்துவிடுகிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை சிரமம் இல்லாமல் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை ஏரி வழியாக நிறைவேற்ற ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 484 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 7) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘தேர்தல் நேரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வகையில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் ஆகியுள்ள மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையை உருவாக்கி அதற்குத் தனி அலுவலர்களை நியமித்து, பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

சென்னை, கோட்டையில் முதல்வர் அலுவலகம் இயந்திரம்போல் இயங்கி வருகிறது. கரோனா பரவல் தடுப்புப் பணியாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றாலும் சரி ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து நான் அசந்துவிடுகிறேன்.

தென்பெண்ணை ஆற்றில் இருந்து வீணாகும் தண்ணீரைப் பாலாற்றுக்குத் திருப்பிவிட்டால் ஆண்டுக்கு மூன்று மாதத்துக்குத் தண்ணீர் கிடைக்கும். இந்தத் திட்டத்தை என்னுடைய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இவர்கள் திட்டத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள். தென்பெண்ணையில் இருந்து தண்ணீரை படேதால்வாய் ஏரியில் இருந்து திருப்பத்தூர் அருகேயுள்ள காக்கங்கரை ஏரி வழியாகக் கொண்டு வந்தால் சிரமம் இருக்காது. இந்த திட்டம் குறித்து அறிக்கை கேட்டிருக்கிறேன்.

அதேபோல், பாலாற்றின் குறுக்கே எங்கெல்லாம் தடுப்பணை கட்ட முடியும் என்று அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. மோர்தானா அணையை வரும் 18ஆம் தேதி வாக்கில் திறக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். முன்னதாக அணையின் இடது, வலது காய்வாய் சீரமைப்புப் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை சீக்கிரத்தில் முடிக்க வேண்டும். கால்வாய் கரையை உடைத்துத் தண்ணீரைத் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபால், கடைமடை வரை தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.

மதுரை, திருச்சி போன்ற பேருந்து நிலையங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கின்றன? ஆனால், வேலூர் புதிய பேருந்து நிலையம் அப்படி இல்லை. முன்பக்கம் உள்ள இடத்தைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன். அதேபோல், கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள மின் கம்பத்தை அகற்றினால் அங்கு ஒரு சாலையைப் போட முடியும். இதையெல்லாம் மாற்ற வேண்டும்’’ என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x