Published : 07 Jun 2021 12:15 PM
Last Updated : 07 Jun 2021 12:15 PM

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம்; எதிர்மறையாகச் சிந்திக்காமல் செயல்படுத்த அரசு ஒத்துழைக்க வேண்டும்: எல்.முருகன்

குழு அமைக்கிறோம், ஆராய்ச்சி செய்கிறோம் என்று எதிர்மறையாகச் சிந்திக்காமல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு இத்திட்டம் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும். சமீபத்தில் நடைபெற்ற நதிநீர் இணைப்புக்கு திட்டக் குழுக் கூட்டத்தின் முடிவில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்தும் விரிவான திட்ட அறிக்கையை தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் இச்சம்பள்ளியிலிருந்து கல்லணை வரை 1,165 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. 86 ஆயிரம் கோடி ரூபாயிலான இத்திட்டத்தைச் செயல்படுத்தி நிறைவேற்றுகிறபோது தமிழகத்திற்கு ஆண்டுக்கு 100 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி தமிழக மக்களின் மீது கொண்டுள்ள பாசத்தால் இத்திட்டம் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கடந்த ஆண்டே திட்டத்துக்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தருவேன் என்று கூறியிருந்தார். அதன்படி இப்போது மத்திய அரசு தேசிய நீர்வள மேலாண்மை முகமை விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது. இந்த வாய்ப்பைத் தமிழக அரசு பயன்படுத்தி தமிழகத்தின் நீர் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக இருக்க வேண்டிய தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்காக குழு அமைப்போம், ஆராய்ச்சி செய்வோம் என்று திட்டத்திற்கு எதிர்மறையாகச் சிந்திக்காமல் தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற திட்டங்களுக்கு வழக்கமாக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட மத்திய அரசு முன்வந்தது மேலும் மகிழ்ச்சிக்குரியதாகும். ஏற்கெனவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்துத் தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டித் தந்தது பிரதமர் மோடிதான்.

அதேபோன்று இப்போது காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், நீர் பாசனத்திற்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பை உபயோகிக்க கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்த நடவடிக்கை தொடங்கியுள்ளது பிரதமர் மோடிதான். தமிழக மக்களின் சார்பாக அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x