Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தம் காலமானார்

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஜி.சம்பந்தம் (62) நேற்று செங்கல்பட்டில் காலமானார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான‌ விசாரணைக் குழுவில் 1997 டிசம்பர் 3-ம் தேதி ஜி.சம்பந்தம் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவ்வழக்குக்காக அவர் இரவு பகலாக பாடுபட்டார். மேலும், இவ்வழக்கு 2004-ல்பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது, விசாரணையைக் கண்காணிக்க ஜி.சம்பந்தம் பெங்களூருவுக்கு அனுப்ப‌ப்பட்டார். அவர் சிறப்பாக பணியாற்றியதால் 2007-ல் குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான விருது பெற்றார். 2009-ல் அவருக்கு துணைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2016-ல் அவர் ஓய்வுபெற்றார்.

செங்கல்பட்டு அண்ணா நகரில் வசித்து வந்த சம்பந்தம், கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு மனைவி பிச்சையம்மாள்(56), பிள்ளைகள் பாரதி(33), பார்கவி(30), முத்துபாண்டி(29) ஆகியோர் உள்ளனர். மூத்த மகள் பாரதி அமெரிக்காவில் வசிக்கிறார். 2-வது மகள்பைலட்டாகவும், மகன் டாக்டராகவும் உள்ளனர். சம்பந்தத்தின் உடல் இன்று மதியம் 12 மணி அளவில் செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சம்பந்தம் போன்றதிறமையான, நேர்மையான நண்பரை இழந்தது பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x