Published : 14 Dec 2015 09:58 PM
Last Updated : 14 Dec 2015 09:58 PM

ஆர்.நட்ராஜ் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் இன்று மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் சமீபத்தில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 12-ம் தேதி ஒளிபரப்பான வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.நட்ராஜன் அரசுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது, அத்தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஆர்.நட்ராஜனின் புகைப்படத்துக்குப் பதிலாக முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை தவறுதலாக காட்டியது.

இதற்கிடையே, இதுகுறித்து அதிமுக தலைமைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், முதல்வர் ஜெயலலிதா ஆர். நட்ராஜை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், தொடர்புடைய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தனது செயலுக்கு ஆர்.நட்ராஜிடம் மன்னிப்பு கோரியது. இதுகுறித்து, அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இதையடுத்து, ஆர்.நட்ராஜை மீண்டும் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்த்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x