4 ஆண்டுகளாக கிடப்பில் பணி நிரந்தர அரசாணை; கணினி உதவியாளர்கள் வேதனை
நான்கு ஆண்டுகளாக பணி நிரந்தர அரசாணை கிடப்பில் போடப்பட்டதால், ஊரகவளர்ச்சித்துறையில் கரோனா ஊரடங்கு நேரத்திலும் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தேசிய வேலையுறுதித் திட்டம் 2005-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இப்பணிகளை கண்காணிக்க மேற்பார்வையாளரும், இணையத்தில் பதிவேற்றம் செய்ய கணினி உதவியாளர்களும் 2007-ம் ஆண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் ஒன்றிய அலுவலகங்களில் நியமிக்கப்பட்டனர்
இதில், 2008-ம் ஆண்டு மேற்பார்வையாளர்கள் மட்டும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், கணினி உதவியாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களாகவே உள்ளனர். தற்பாது, 1,843 பேர் பணிபுரிகின்றனர். மேலும், அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து, 2017-ம் ஆண்டு பணி நிரந்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த அரசாணை 4 ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை. தற்போது, கரோனா ஊரடங்கு நேரத்திலும் தேசிய வேலையுறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், கணினி உதவியாளர்களும் 100 சதவீதம் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சமயத்திலாவது தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து, கணினி உதவியாளர்கள் கூறுகையில், "எங்களுடன் பணியில் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, பலர் உதவி பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், நாங்கள் மட்டும் 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்திலேயே பணிபுரிகிறோம்.
எங்கள் பணி தற்போது கரோனா ஊரடங்கிலும் தொடர்கிறது. இதனால், பணி நிரந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும்" என்று கூறினர்.
