Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக்கை திறக்க கூடாது: மேலாண் இயக்குநர் உத்தரவு

மறு உத்தரவு வரும் வரை மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்று மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கரோனா ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர், ஊரடங்கு 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போதுஊரடங்கு உத்தரவை வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டிருப்பதை அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை நடக்காமல் இருப்பதை, மாவட்ட மேலாளர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மதுபானக் கடை களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையுடன் இணைந்து மாவட்ட மேலாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்குவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x