Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

உணவகங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக, சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

அதில், உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு, சேவை வரிக்கான வரம்புக்குள் உட்படாது. பார்சல் உணவு என்பது வணிகம் மட்டுமே. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து, குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி உணவு உட்கொள்ளும்போது மட்டுமே சேவை வரி பொருந்தும்.

சட்ட விரோதமானது

ஆனால், உணவகங்களில் இருந்து பார்சலாக எடுத்துச் செல்லப்படும் உணவு வகைகளுக்கு சேவை வரி வசூலிப்பது என்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்திருந்தன.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜோசப் பிரபாகர், ஹரி ராதாகிருஷ்ணன், பி.ஜெயலட்சுமி ஆகியோரும், மத்திய அரசின் சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் துறை சார்பில் வழக்கறிஞர்கள் ரஜினிஷ் பதியில், ஏ.பி.னிவாஸ், வி.சுந்தரேஸ்வரன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

உத்தரவுகள் ரத்து

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுகளுக்கு சட்ட ரீதியாக சேவை வரி விதிக்க முடியாது. அவ்வாறு வசூலிக்கவும் முடியாது.

எனவே, இது தொடர்பாக உணவகங்களுக்கு சரக்கு சேவை வரித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் ரத்து செய்யப்படுன்றன" என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x