

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை, கே.கே.நகர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மே 24ஆம் தேதி கைது செய்தனர்.
ஜூன் 8-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு, சென்னை போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதித்தார். போலீஸ் காவல் முடிந்து நேற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாகவும், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால், ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ராஜகோபாலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்துடன் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனவும், ஏற்கெனவே காவல்துறை காவலில் எடுத்து விசாரித்து விட்டதாகவும், ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையததால், தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, ராஜகோபாலனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.