Last Updated : 05 Jun, 2021 03:12 AM

 

Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

உறவினர்கள் முன்வராத நிலையில் கரோனாவால் இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்யும் தந்தை, மகன்: இரண்டு மாதங்களில் 62 உடல்கள் அடக்கம்

ராஜா

சிவகங்கை

சிவகங்கையில் கரோனாவால் இறந்தோரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத நிலையில் 62 பேரின் உடல்களை தந்தை, மகன் அடக்கம் செய்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் 20 முதல் 25 பேர் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் இறக்கின்றனர். சிலர் சொந்த ஊர்களுக்குக் கொண்டுச் சென்று உடல்களை அடக்கம் செய்கின்றனர்.

பல இடங்களில் கரோனா அச்சம் காரணமாக இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் முன்வராத நிலை உள்ளது. இதையறிந்து தன்னார்வலரும், சிவகங்கை நகர திமுக இளைஞரணிச் செயலாளருமான அயூப்கான் (45), அவரது மகன் ராஜா (19) ஆகியோர் சிலரது உதவியோடு இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் இறந்தோரின் மத முறைப்படி இரவு, பகல் பாராமல் இறுதிச் சடங்குகளைச் செய்து அடக்கம் செய்கின்றனர்.

கடந்த 2 மாதங்களில் 62 பேரின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து இச்சேவையில் ஈடுபட்டு வரும் அவர்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டினார்.

இதுகுறித்து அயூப்கான் கூறியதாவது: இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு நேரம், காலம் பார்ப்பதில்லை. எப்போது அழைத்தாலும் செல்கிறோம். கரோனா முதல் அலையில் 16 பேரின் உடல்களை அடக்கம் செய்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் என்னைப் பாராட்டி விருது வழங்கினார்.

தற்போது 2-வது அலையிலும் தொடர்ந்து இச்சேவையை செய்து வருகிறோம். எந்த மதமாக இருந்தாலும் இறந்தவர்களை அடக்கம் செய்வதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பார்த்து எனது மகனும் இச்சேவையில் ஈடுபட்டு வருகிறான். எங்களுக்கு இளைஞர்கள் சிலரும் உதவி செய்கின்றனர் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x