Last Updated : 05 Jun, 2021 03:12 AM

 

Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

ஒருபுறம் கரோனா அச்சம், மறுபுறம் கனமழை; வீடு இல்லாமல் தவிக்கும் மலை கிராம மக்கள்: உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்ட 18 மலைவாழ் கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கோடந்தூர், குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கரட்டுபதி என பெரும்பாலான மழைவாழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. வனத்துறையின் கட்டுப்பாடுகளால், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக இம்மக்களை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. குடியிருக்க கான்கிரீட் வீடுகளின்றி, ஓலை வேய்ந்த கூரை வீடுகள் அல்லது தகர சீட் வேயப்பட்ட மண்சாந்து கொண்டு கட்டப்பட்ட குடிசைகளில்தான் வசிக்கின்றனர்.

இதுகுறித்து கரட்டுபதி கிராம மக்கள் கூறும்போது, "அமராவதி அணையை ஒட்டிய பகுதியிலுள்ள கரட்டுபதியில் 90 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள், பிழைப்புக்காக மீன் பிடித்தல் அல்லது விவசாய கூலி வேலைகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரசு அறிவிக்கும் திட்டங்கள் வனத்துறை மூலமாகதான் நிறைவேற்றப்படும். ஆனால், அடிப்படையான எந்த நலத்திட்டமும் முழுமையாக கிடைப்பதில்லை. தேர்தலுக்கு முன்பாக அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வீடின்றிவசிப்போர் மிகுந்த அவதிக் குள்ளாகி வருகின்றனர். கால்நடைகளை நம்பியிருப்போர் அவற்றைபாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். குடும்ப செலவுகளுக்காக ஆடு, கோழிகளை வளர்க்கிறோம். அவை நோய் தாக்குதலால் கூண்டோடு இறந்தன.

கரோனா நோய் தொற்று காரணமாக வேலைவாய்ப்பு, வருமானம் இன்றி முடங்கியுள்ளனர். நகரங்களில் வசிப்போருக்கு மட்டுமே தன்னார்வலர்களால் உதவிக்கரம் நீள்கிறது. எங்களை போன்ற மலைவாழ் மக்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அமராவதி வனச்சரக அலுவலர்சுரேஷ்குமார் கூறும்போது, "மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் குறித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரண உதவி களை, வனத்துறை சார்பில் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடுகள் இல்லை. வருவாய் துறை மூலம் செய்யப்படுகிறது. இதுதவிர தன்னார்வ அமைப்பினர் யாரேனும் முன் வந்தால் வரவேற்கிறோம். வனத்துறை சார்பில் இரண்டு மலைவாழ் கிராமங்களில் கபசுரகுடிநீரும், மருந்தும் விநியோகிக்கப்பட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x