Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தருமபுரி மாவட்டத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் சார்பில் 20 பயனாளிகளுக்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தமிழக அரசின், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களில் தகுதியானவை மீது விரைவான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி விரைவுபடுத்தியுள்ளார். அதன் ஒருபகுதியாக 20 பயனாளி களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி 20 பயனாளிகளுக்கு ரூ.21.47 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 8437 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு மனுவின் மீதும் அதிக அக்கறை கொண்டு மனுவின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திட அரசுத்துறை அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் தற்போது 169 பயனாளிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. மேலும் 274 தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மனுக்கள் மீதும் அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையின்போது தமிழக முதல்வர் பெற்ற மனுக்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட செயலி மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வீட்டு மனை பட்டா, உதவித் தொகை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீடு, தார்சாலை, சிமெண்ட் சாலை, புதிய வழித்தட பேருந்து வசதி, குக்கிராமங்கள் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு போன்ற அடிப்படை பணிகளில் அலுவலர்கள் கவனம் செலுத்திட வேண்டும். மனுக்களை பரிசீலித்து தகுதியான மனுதாரர் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசின் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும்.இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x