Last Updated : 30 Dec, 2015 03:09 PM

 

Published : 30 Dec 2015 03:09 PM
Last Updated : 30 Dec 2015 03:09 PM

கடலூரில் புதிய சான்றிதழ்கள் கோரி 18,000 பேர் விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 75 ஆயிரம் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளானது.குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் தங்களது அனைத்து ஆவணங்களையும் வீடுகளிலேயே விட்டு, விட்டு வெளியேறினர். வெள்ளம் வடிந்த பின்னர் வீடுகளுக்குத் திரும்பிய போது அதில் பெரும்பாலானவை சேதமடைந்ததோடு, ஏராளமான வீடுகள் இடிந்து ஆவணங்களும் காணாமல் போனது.

எனவே மாற்று ஆவணங்கள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனடிப்படையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு புதிய ஆவணங்கள் வழங்கப்படுமென முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் டிச.14-ம் தேதி புதிய ஆவணங்கள் வழங்குவதற்கு விண்ணப்பம் பெறுவதற்கான முகாம் 9 வட்டாட்சியர் அலுவலகங்கள் உட்பட 13 இடங்களில் தொடங்கியது. 2 வாரங்கள் நடைபெற்ற இந்த முகாம் இம்மாதம் 27-ம் தேதியோடு நிறைவு பெற்றது.

இந்நிலையில், குடும்ப அட்டை தொடர்பாக 5,112 மனுக்கள், பள்ளிச் சான்றிதழ் கேட்டு 4,958, கல்லூரிச் சான்று கேட்டு 306, ஐடிஐ சான்று கேட்டு 76 மனுக்கள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு 3,768 மனு, ஆதார் அட்டை கேட்டு 332 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக 1,204 மனு, நில அளவைத் தொடர்பாக 977 மனு, ஓட்டுனர் உரிமம் கேட்டு 925 மனு, வாகன உரிமைச்சான்று கேட்டு 245 மனு பெறப்பட்டது.

இதே போன்று வங்கி கணக்குப்புத்தகம் கேட்டு 12 மனு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கோரி 20, பிறப்பு, இறப்புச் சான்றுக்கோரி 567 மனுக்கள் மொத்தம் 18,502 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x