

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இந்திய அளவில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இதற்கிடையில், ஜனவரி 16-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் (cowin) என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மொபைல்போன்களுக்கு ஏற்ற வடிவில் கோவின் என்ற செயலியாகவும் கிடைக்கிறது. இந்த கோவின் இணையம் மற்றும் செயலியில் தொடக்கத்தில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது.
தற்போது, பிற மாநில மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 04) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தடுப்பூசிக்குப் பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாதது வருத்தம் அளிக்கிறது!
கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால், ஆங்கிலம் தெரியாதவர்களால் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாகத் தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்!" என வலியுறுத்தியுள்ளார்.