Published : 04 Jun 2021 06:54 PM
Last Updated : 04 Jun 2021 06:54 PM

கரோனா சிகிச்சை; மருத்துவமனைகளின் நிலுவைத் தொகையை உடனே வழங்குக: புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கரோனா சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கும்படி புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு பரிந்துரையின் அடிப்படையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்பதை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக ஏ.ஆனந்த் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனை தரப்பில் அரசால் பரிந்துரைத்து அனுப்பப்படுபவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், அவ்வாறு வருபவர்கள் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் அரசு பரிந்துரை செய்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தையும், உணவு வழங்கியதற்கான கட்டணத்தையும் அரசு இதுவரை முழுமையாகச் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாகவும், மருத்துவமனைக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் முன்தொகை செலுத்தினால் மட்டுமே சப்ளை செய்ய முடியும் எனக் கண்டிப்புடன் தெரிவிப்பதால் இந்தத் தொகையை விரைவாக விடுவிப்பதற்கு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் புதுச்சேரி அரசு இன்று தாக்கல் செய்த அறிக்கையில், நோயாளிகளின் உணவுச் செலவிற்காக முன்பணமாக 5 லட்ச ரூபாயை கடந்த அக்டோபர் மாதமும், பின்னர் 15 லட்ச ரூபாயைக் கடந்த மாதமும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காகவும், உணவுக்காகவும் புதுச்சேரி அரசு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாவிட்டால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பொருட்கள் எவ்வாறு கிடைக்கும் என அரசுக்குக் கேள்வி எழுப்பியது.

மேலும், அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், நோயாளிகளிடமும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தும்படி அறிவுறுத்தி, ஆனந்த் வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x