பாலியல் வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர்: 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி

பாலியல் வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர்: 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

பயிற்சி வீராங்கனைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். சென்னை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகளப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் இவரிடம், தடகள வீராங்கனைகள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர்.

நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அவரது புகாரில், நாகராஜன் பல சமயங்களில் பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

இந்த புகாரில் நாகராஜன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மே 28ஆம் தேதி நாகராஜனைக் கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஜுன் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பயிற்சியாளர் நாகராஜனை 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அனுமதி கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in