ஊரடங்கால் கொய்மலர்கள் விற்பனை முடங்கியது: கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு  

கொடைக்கானல் மலைப்பகுதி பூம்பாறை கிராமத்தில் விளைந்துள்ள கொய்மலர்கள். 
கொடைக்கானல் மலைப்பகுதி பூம்பாறை கிராமத்தில் விளைந்துள்ள கொய்மலர்கள். 
Updated on
1 min read

கொடைக்கானல் மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்மலர்களை ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களுக்கு அனுப்பமுடியாத நிலையில் விவசாயிகள் இழப்பிற்குள்ளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைத்து கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

இங்கு விளைவிக்கப்படும் கொய்மலர்கள் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பத்து மலர்கள் கொண்ட ஒரு கொத்து கொய்மலர்கள் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகியது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக முழு ஊரடங்கு காரணமாக, வெளி மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்லமுடியாதநிலையில், கொய்மலர்களைப் பறித்து பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதனால் செடியிலேயே பூக்களைப் பறிக்காமல் விட்டதால் முழுமையாக மலர்ந்தும், அழுகியும் காணப்படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொய்மலர்கள் சாகுபடி செலவைக்கூட எடுக்கமுடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி கொய்மலர் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும். இழப்பிற்கு விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என கொடைக்கானல் மலைப்பகுதி கொய்மலர் சாகுபடி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

விற்பனைக்கு அனுப்ப வழியில்லாததால் செடியிலேயே சேதமடைந்த கொய்மலர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in