Published : 04 Jun 2021 02:36 PM
Last Updated : 04 Jun 2021 02:36 PM

ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை? முதல்வருடன் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை

முதல்வர் ஸ்டாலினுடன் மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆலோசனையில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்ததால் 36,000 வரை தொற்று எண்ணிக்கை உச்சம் தொட்டது. இதனால் தமிழக அரசு ஊரடங்கைப் படிப்படியாக அதிகரித்தது. முதலில் தளர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலானது.

மருத்துவ நிபுணர்கள் முழு ஊரடங்கே தீர்வு என வலியுறுத்தியதின் அடிப்படையில் மே 10ஆம் தேதி ஊரடங்கு அமலானது. ஆனால், கட்டுப்பாடுகள் கடுமையாக இல்லாததால் தொற்றுப் பரவல் குறையவில்லை. இதையடுத்து மே 24 முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. பின்னர் மீண்டும் ஆலோசனை நடத்தி மேலும் ஒரு வாரம் நீட்டித்தது.

ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று 25 ஆயிரம் என்கிற எண்ணிக்கையாகக் குறைந்துள்ளது. சென்னையில் 6,500 என்கிற தினசரி தொற்று எண்ணிக்கை 2,500 என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனாலும், சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கவலை தரும் நிலையில் குறையாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலர், காவல் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இன்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா பரவல் ஓரளவு குறைந்திருந்தாலும் மாவட்டங்களில் குறையாததைச் சுட்டிக்காட்டிய மருத்துவ நிபுணர்கள் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வலியுறுத்தியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடங்கு என்பதை மாற்றி சில மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் எனப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x