Published : 04 Jun 2021 02:19 PM
Last Updated : 04 Jun 2021 02:19 PM

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முன்னேற்றம்; 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப் பருவமழை தமிழகத்திலும் முன்னேறியுள்ளது. இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

வெப்பச் சலனம் மட்டும் தமிழ்நாட்டின் தென்கடல் ஓரத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும்) குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டி (3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வறட்சி காரணமாகவும் கர்நாடகம் முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும்

ஜூன் 4 அன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 5 அன்று தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 6 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு

சித்தாறு (கன்னியாகுமரி) 14 செ.மீ., சிவலோகம் (கன்னியாகுமரி) 12 செ.மீ., பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 11 செ.மீ., பெருஞ்சாணி (கன்னியாகுமரி) 10 செ.மீ., மாரண்டஹள்ளி (தருமபுரி) 9 செ.மீ., நிலக்கோட்டை (திண்டுக்கல்), உசிலம்பட்டி (மதுரை) தலா 7 செ.மீ., கரியபட்டி (விருதுநகர்), நாமக்கல் தலா 6 செ.மீ., வால்பாறை (கோவை) 5 செ.மீ., காங்கேயம் (திருப்பூர்) 4 செ.மீ., துவாக்குடி (திருச்சி) ஓமலூர் (சேலம்) ஓசூர் (கிருஷ்ணகிரி) சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 4, ஜூன் 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 4, ஜூன் 5 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை தென்மேற்கு கடல் பகுதியில் பலத்த காற்று (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்) மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு: தென்மேற்குப் பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x