உணவின்றி வாடும் தெரு விலங்குகளுக்கு உதவி: தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் வேண்டுகோள்

உணவின்றி வாடும் தெரு விலங்குகளுக்கு உதவி: தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் வேண்டுகோள்
Updated on
1 min read

ஆளுநர் அளித்த ரூ.10 லட்சம் நிதி தெரு விலங்குகளின் ஆரம்பக்கட்ட உணவிற்கு உதவி புரிந்துள்ளது. ஊரடங்கில் உணவின்றித் தவிக்கும் பிராணிகளுக்கு உணவு கிடைக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவிக்கும் தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்கக் கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 9 லட்சம் ரூபாயை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தெருநாய்கள், விலங்குகளுக்கு உணவளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மாவட்ட ரீதியாக ஒதுக்கியுள்ள தொகையில் சில மாவட்டங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல என்று தெரிவித்தார்.

இதையடுத்து, தெருநாய்கள், விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக அரசு நிதி ஒதுக்கும் முன், 10 லட்சம் ரூபாயை ஆளுநர் ஒதுக்கீடு செய்ததாகத் தெரிவித்த நீதிபதிகள், கரோனா ஊரடங்கு நேரத்தில் உணவின்றித் தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க நிதியுதவியோ, பொருளுதவியோ வழங்க தனியார் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in