

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைசெயல்படுத்துவதில் தமிழக அரசின்நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்மற்றும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை செயலாளர்சுதான்ஷூ பாண்டே கலந்துகொண்டு பத்திரிகையாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 14 மாநிலங்களில் நூறு சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பிஹார், ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அசாம், டெல்லி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகியமாநிலங்களில் விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
கரோனா பாதிப்புக்கிடையே புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 69 கோடி மக்கள் அதாவது நாட்டின் மக்கள்தொகையில் 86 சதவீதம் பேர் இதனால் பயனடைந்துள்ளனர். மே, ஜூன் மாதத்துக்கான உணவுப் பொருட்கள் விநியோகம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஆனால், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசுசுணக்கம் காட்டுகிறது. அதற்காகதமிழகத்துக்குத் தேவையான நிதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது.
தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் உயர்மட்ட அதிகாரிகளுடன், இத்திட்டத்தைச் சிறந்த முறையில் அமல்படுத்துவது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் செய்து வருகிறோம். ஆனாலும், தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ்ஏற்கெனவே சத்தான உணவுப்பொருட்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாநில அரசு கொடுக்கும் தரவுகள் அடிப்படையில்தான் மத்திய அரசு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்குகிறது. மாநில அரசுகள் தரும் தரவுகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்னும் ஓரிரு வாரங்களில் சமையல் எண்ணெய்களின் விலை இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.