Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

சென்னையில் ஸ்டான்லி, தாம்பரம் சானடோரியம் உட்பட 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரத்துக்கான வசதி: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னையில் மேலும் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்வழங்குவதற்காக இரு மின் வழித்தட வசதி செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் அரசு மருத்துவமனையில் தொடர் மின் சுற்று கருவி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை கரோனா தடுப்பூசி மையம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, சேப்பாக்கம் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனை, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது தொடர் மின் சுற்று கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த மருத்துவமனைகளில் தலா 2 மின் வழித்தடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு வழித்தடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதிகபட்சமாக 3 விநாடிகளில் தானாகவே இந்த கருவி மூலமாக மற்றொரு மின் வழித்தடம் வாயிலாக மருத்துவமனைக்கு மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படும். இதனால், எவ்வித அசாதாரண சூழலிலும், தங்குதடையின்றி மும்முனை மின்சாரம் கிடைக்கும்.

முதல்வர் உத்தரவுப்படி, ஆக்சிஜன் உற்பத்தி செய்ய விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x