Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

முதலியார்பேட்டை தொகுதியில் திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை: திட்டத்தை தொடங்கி வைத்தார் திமுக எம்எல்ஏ

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, தொகுதி எம்எல்ஏ சம்பத்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தனது தொகுதி யிலுள்ள திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை திமுக எம்எல்ஏ சம்பத் தொடங்கி யுள்ளார்.

புதுச்சேரி திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் நடந்த நிகழ்வுக்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமை தாங்கினார். திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தொகுதி செயலர் திராவிட மணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கலைஞரின் திருநங்கை உதவித்தொகை தரும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ சம்பத் கூறியதாவது:

மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கைகள் என்று முதல்வராக இருந்தபோது பெயர் மாற்றத்தை கருணாநிதி செய்தார். புதுச்சேரியில் திருநங்கைகளுக்கு அரசு தரும் உதவித்தொகை ரூ.1,500 போதுமானதாக இல்லை. அதனால் சமூகத்தில் பிறரிடம் உதவி கேட்கும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தொகையை அரசு அதிகரித்து தர கோருகிறோம்.

முன்னுதாரணமாக கலைஞரின் திருநங்கை உதவித்தொகைத் திட்டத்தை கருணாநிதி பிறந்தநாள் விழாவில் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம்எனது தொகுதியான முதலியார்பேட்டையில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த உள்ளோம். முதல் தவணையை தந்து இத்திட்டத்தை துவக்கியுள்ளோம்.

முதலியார்பேட்டை தொகுதியைச் சார்ந்த திருநங்கைகள் 9488843327 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். அரசுமட்டுமே திட்டத்தை ஏற்படுத்த முடியும் என்பதில்லை எம்எல்ஏவாலும் செய்ய முடியும் என்பதற்காகவே முதலாவதாக இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x