மால்கள், வணிக வளாகங்களில் வரம்பு மீறிய வாகன பார்க்கிங் கட்டணம்: அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

மால்கள், வணிக வளாகங்களில் வரம்பு மீறிய வாகன பார்க்கிங் கட்டணம்: அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள மால்கள், வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமான விதிகளின்படி, வணிக வளாகங்கள், மால்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த வாகன நிறுத்துமிடங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த விஜயகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், வணிக வளாகங்கள், மால்களில் வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதை மீறி சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

வாகன நிறுத்துமிடங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என ஆந்திரா மற்றும் குஜராத் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மால்கள், வணிக வளாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிக கட்டண வசூல் குறித்து புகார் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in