

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து வழக்கை முடித்து வைத்துள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும்படி உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதைப் போல நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோர முடியாது என்றனர்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பாடு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டாமா? மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க அவகாசம் வழங்க வேண்டாமா? என மனுதாரரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நீதிமன்றம் நம்புவதாக கூறிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட மறுத்து வழக்கை முடித்து வைத்தனர்.