Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

தப்பிய ரவுடிகள் மாவுக்கட்டு போட்ட நிலையில் கைது- காயம் குறித்து போலீஸார் விளக்கம்

சென்னை

காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்ற ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களது கைகள் முறிந்த நிலையில் மாவுகட்டு போடப்பட்டிருந்தன. கைகள் முறிந்தது குறித்து போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியில் அண்மையில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், அஜய்குப்தா, ஜெகதீஷ்வரன் ஆகிய 3 பேரை பிடித்து வியாசர்பாடி போலீஸார் விசாரணை நடத்தினர். இவர்கள் மீது வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் 3 பேரையும் காவல் நிலையத்தில் ஓர் அறையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் அந்த அறையில் 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அந்த அறையை திறந்து, 3 பேரையும் சமாதானம் செய்ய முயன்றார். இதில் தகராறில் ஈடுபட்டதுபோல நாடகமாடிய 3 பேரும், காவல் உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பினர்.

இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ஜெகதீஷ்வரனை பிடித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அஜய்குப்தா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸார் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க முடிவு செய்ததால் தப்பியதாக தன்னிலை விளக்கம் அளித்தார்.

போலீஸார் அடிக்காவிட்டால் சரணடைகிறேன் என தனது வழக்கறிஞர் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த அஜித்குமார், அஜய் குப்தா இருவரையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இருவருக்கும் தலா ஒரு கை உடைந்த நிலையில் அதற்கு மாவுக்கட்டு போட்டுள்ளதுபோல் உள்ள புகைப்படங்கள் சமூக வலைளதங்களில் வைரலானது.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, அஜித் குமார், அஜய் குப்தா இருவரும் தங்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்து கைகள் முறிந்துள்ளன. தாங்கள் மருத்துவமனை அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளோம் என்றனர்.

கரோனாவுக்கு முன்னர் சென்னையில் அவ்வப்போது ரவுடிகளுக்கு போலீஸார் மாவு கட்டு போட்டு வந்தனர். தற்போது மேலும் 2 ரவுடிகளுக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x