Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM
பிரபல ரவுடி சி.டி. மணியை போலீஸார் பிடிக்கும்போது, ரவுடி துப்பாக்கியால் சுட்டதில் காவல் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். போலீஸாரிடமிருந்து தப்பி ஓட பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சி.டி.மணி என்ற மணிகண்டன் (38). இவர் மீது 10 கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இவர், தன் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இவரை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் போரூர் மேம்பாலம் அருகில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை தனிப்படை போலீஸார் நேற்று மதியம் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த காருக்குள் இருந்த சி.டி மணி, போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காயமடைந்தார்.
சுதாரித்துக் கொண்ட போலீஸார், சி.டி மணியை பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோட முயன்றார். அப்போது பாலத்திலிருந்து கீழே குதித்ததால் அவருக்கு இடது கால் மற்றும் இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.டி.மணியைப் பற்றி போலீஸார் கூறும்போது, “தேனாம்பேட்டையில் சாலையோரத்தில் சி.டி விற்று பிழைப்பு நடத்தி வந்ததால் சி.டி மணி என அழைக்கப்பட்டார். பின்னர் நாளடைவில் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை என குற்ற பின்னணி உடையவராக மாறினார். ரவுடிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக, அவர் எப்போதும் துப்பாக்கியுடன் வலம் வருவார். ரவுடி பினுவின் கைதுக்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைப் பிடிக்க காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், ரவுடி சி.டி மணி ஒவ்வொரு முறையும் போலீஸ் வலையில் இருந்து தப்பி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் பிடிபட்டுள்ளார்” என்றனர்.
சி.டி மணி பயன்படுத்திய துப்பாக்கி, அவரே தயாரித்த கள்ளத் துப்பாக்கி போன்று இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT