Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

சென்னையில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்ற 4 வியாபாரிகளின் விற்பனை அனுமதி ரத்து

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த 4 வியாபாரிகளின் விற்பனை மற்றும் வாகன அனுமதியை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், முட்டை, ரொட்டி மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரில் சென்று விநியோகிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வியாபாரிகளுக்கு விற்பனை மற்றும் வாகன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர்கள் அனைத்து பகுதிகளிலும் விற்பனை மேற்கொள்ளவும், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் தினசரி விற்பனை செய்யும்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து விற்பனை மேற்கொள்ளவும், பொருட்களின் விலைப்பட்டியலை வாகனத்தில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், உத்தேச சில்லறை விற்பனை விலையை விட அதிகமாக விற்றால் மாநகராட்சியால் வழங்கப்பட்ட விற்பனை மற்றும் வாகன அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாதவரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் மாநகராட்சி கள ஆய்வு மேற்கொண்டதில், உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளின் வியாபாரம் மற்றும் வாகன அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலைப்பட்டியல் மற்றும் இதர குறைகள் தொடர்பாக மாநகராட்சி தலைமையிட கட்டுப்பாட்டு அறைக்கு 94999 32899, 044 4568 0200 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இக்கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 1,139 புகார்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x