Last Updated : 02 Jun, 2021 08:00 PM

 

Published : 02 Jun 2021 08:00 PM
Last Updated : 02 Jun 2021 08:00 PM

நெல்லையில் 320 படுக்கைகளுடன் 2 கரோனா சிகிச்சை மையங்கள்: காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டத்தில் 320 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 2 கரோனா சிகிச்சை மையங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரத்தில் புனித அந்தோனியார் கல்வியியல் கல்லூரியில் 140 படுக்கை வசதிகளுடனும், தெற்கு வள்ளியூரில் யுனிவர்சல் பொறியியல் கல்லூரியில் 180 படுக்கை வசதிகளுடனும் 2 கரோனா சிகிச்சை மையங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு மையங்களிலும் ஆக்சிஜன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை மையத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மு. அப்துல்வகாப், ரூபி மனோகரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை முன்னேற்பாடுகள், எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் கூறும்போது, தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்குமுன் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் இருந்தது. தற்போது அந்நிலை மாறி போதுமான அளவுக்கு படுக்கை வசதியும், ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் பல்வேறு சவால்களை சந்தித்து கரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளால் கரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கூறும்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெறுவோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக சத்தான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x