Published : 02 Jun 2021 05:47 PM
Last Updated : 02 Jun 2021 05:47 PM

புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி 

சென்னை

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுவை சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி கரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்காத நிலையில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரையை வழங்கும் எனவும், ஆளுநர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவைச் செல்லாது என அறிவித்து அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மே 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என நியமன எம்எல்ஏக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x