Last Updated : 02 Jun, 2021 05:24 PM

 

Published : 02 Jun 2021 05:24 PM
Last Updated : 02 Jun 2021 05:24 PM

ரேஷன்கடை டோக்கன் வீடு, வீடாக வழங்காமல் ஒரே இடத்தில் விநியோகம்: காரைக்குடியில்  அடிதடியால் பரபரப்பு

காரைக்குடி பட்டவர்கோயில் தெருவில் டோக்கன் வாங்குவதில் சிலருக்கு இடையே அடிதடி ஏற்பட்டது.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் பல ரேஷன்கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வீடு, வீடாக டோக்கன் வழங்காமல் ஒரே இடத்தில் விநியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் காரைக்குடியில் ஏராளமானோர் குவிந்ததால் டோக்கன் விநியோகத்தில் அடிதடி ஏற்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ரேஷன்கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடைகளில் கூட்டம் குவிவதை தடுக்க ஜூன் மாதப் பொருட்களை டோக்கன் முறையில் வழங்க அரசு உத்தரவிட்டது.

இந்த டோக்கன்கள் ஜூன் 1 முதல் ஜூன் 4-ம் தேதி வரை வீடு, வீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் டோக்கன் தயாராக இல்லாததால் சிவகங்கை மாவட்ட ரேஷன்கடைகளில் நேற்று டோக்கன் வழங்கவில்லை. இதனால் டோக்கன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று டோக்கன் வழங்கப்பட்டன. ரேஷன்கடை ஊழியர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான இடங்களில் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கவில்லை. ரேஷன்கடைகள் (அ) ஏதாவதொரு பொது இடங்களில் வைத்து டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்நிலையில் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதி ரேஷன் கடைக்குரிய டோக்கன்கள் பட்டவர்கோயில் தெருவில் வழங்கப்பட்டது. ஒரே இடத்தில் வழங்கியதால் டோக்கன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர் . மேலும் டோக்கன் பெறுவதில் சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அடிதடியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரேஷன்கடை ஊழியரும் டோக்கன் வழங்குவதை பாதியில் நிறுத்தினார். இதனால் மற்றவர்கள் டோக்கன் வாங்குவதற்காக ரேஷன்கடை ஊழியரை விரட்டிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x