Published : 02 Jun 2021 04:08 PM
Last Updated : 02 Jun 2021 04:08 PM

ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையம் விவகாரம்; நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி ஜெய்ராம் ரமேஷுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்க, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, இன்று (ஜூன் 02) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு எழுதிய கடிதம்:

"கரோனா பெருந்தொற்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

பல மாத ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒருசில நிறுவனங்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி மருந்துகளை கண்டறிந்துள்ளன.

ஆனால், மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாட்டில், அதிகளவிலான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதன்மூலம், அந்த ஆலையை இயக்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பெற்று, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற தென்மாநிலங்களுக்குமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்.

ஜெய்ராம் ரமேஷ்: கோப்புப்படம்

இதுகுறித்து, மத்திய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இதுகுறித்து ஆலோசித்து, மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.

எனவே, இது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்".

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x