

மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சிகளைத் தொடரும் வகையில், தேதியைப் பின்னர் அறிவித்தாலும், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரியுள்ளது.
இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை:
“தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல், பிளஸ் 2 தேர்வு மட்டும் ரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
தமிழக அரசு, மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல், நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு எழுத்துப் பூர்வமான பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒருமாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும்.
மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்வு எழுத வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆசிரியர்களும் இருக்கும் பகுதியிலேயே தேர்வுப் பணிகளை மேற்கொள்ளலாம். தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள வலுவான பள்ளிக் கல்விக் கட்டமைப்பை சரியாகப் பயன்படுத்தி பாதுகாப்பாக தேர்வை நடத்த இயலும்.
மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சிகளைத் தொடரும் வகையில், தேதியைப் பின்னர் அறிவித்தாலும், தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசைக் கோருகிறது”.
இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.