வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென் கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாத மத்தியில், காற்று வீசும் திசையின் காரணமாக மழையின் தன்மை மாறுபடும். அந்த வகையில் தற்போது வடதமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து, தென் தமிழகத்தில் தற்போது பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் குமரிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்த நிலையில், தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில் இரு தினங்களும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று , தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ஸ்ரீ வைகுண்டத்தில் 9, திருச்செந்தூரில் 7, நாகை, நான்குநேரியில் -5, ராதாபுரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in