Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து போராடுவது ஜனநாயக உரிமை எனக் கூறி, கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் கடந்த 2018, செப்.10-ம் தேதி போராட்டம் நடந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வரும் 7-ம் தேதிஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘‘அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை என்பதால் இந்த வழக்கு நிலைக்கத் தக்கதல்ல’’ எனக் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT